Monday, 17 February 2014

சிங்காரச் சென்னை!

சென்னை எங்கள் சென்னை-நல்ல
சிங்காரச்சென்னை!
பண்ணைப் பால் பண்ணை-அது
மாதாவரம் பண்ணை!

மேலே ஓடும் பாலம்--அழகு
கோலம் போடும் ஜாலம்!
கீழே வாழும் பாவம்--இன்னும்
வாழ்வதென்ன கோலம்!

பறக்கும் ரயிலு பாரு---அது
பார்க்க ரொம்ப ஜோரு!
மணக்குங் காவா கீழே--செத்த
மூக்கிருப்பதாலே!

உள்ளே மேலே ரயிலு--- நாளை
ஓடும் பாரு அழகு!
நில்லாமலே ஜனமே---- சிகுனல்
இல்லாதாலே நலமே!

ஓடும் ஆறு ரெண்டு--அதில்.
கூடும் சேறு கண்டு
பாடும் கொசு சிந்து--காதை
தேடும் தாலாட்டுண்டு.

மெரினா விக்கிற காத்து---அங்கே
மெனக்கெடுகிற கூத்து!
வரிப்பணத்த சேத்து--- தினமே
பரிபோகுதே நீத்து!

காலை மாலை சாலை--வரிசை
காத்துக் கிடப்பதே வேலை.
போகும் வேலை போச்சே--அய்யோ
பொழப்புக் கெடலாச்சே.

சொகுசு பஸ்ஸூ பேச்சு--அதில்
போகவில்ல மூச்சு,
சொகுசத்தான காணோம்---இதில
பவுசு ஒன்னும் வாணாம்.

ஏக்கங்களை மூட்டகட்டி--நல்ல
தூக்கங்களை பாடகட்டி
சுண்ணங் கீச்சி வீடுகட்டி--நடை
திண்ணையில் வாழுறாங்க.

குடிசை இடம் தேடுது---பாவம்
கூவத்தோடு ஓடுது !
கோபுர்ங்கள் ஊரிலே---ஏழை
சாபம் வாங்கி வாழுது!

சென்னை மொழி புரியுமா--அது
என்ன மொழி தெரியுமா?
உலகத்து மொழிகளிலே--ஒரு
கலக்கலான மொழியது.

இது சிங்காரச் சென்னை--இங்கே
இழுக்குதா உன்னை!
கைகழுவும் காகிதமாய்--நாளும்
கசங்கணுமா அண்ணே!

பொய்மறைக்கும் மெய்க்கோசம் ---அது
பூசிமணக்கும் பொய் வாசம்!
எல்லாமே செய் வேசம்---இது
சென்னை மேவும் வாசம்!

கொ.பெ.பி.அய்யா..





No comments:

Post a Comment